ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி மஹா மந்த்ரோபதேச கவசம்

ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி மஹா மந்த்ரோபதேச கவசம்

ஓம் ஸ்ரீ கணேசாய நம:
ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம:
ஓம் சரவண பவ

ஸுமுகா கஜமுகா ஸர்வ விக்ன விநாயகா
பந்தபாசம் விலகிட ஸ்வாமிநாதனாய் முன் வந்து
ஸத்குரு ஸ்வாமிநாதனின் ஸர்வ மங்கள கவச மருளி
சிவகுரு ஸ்வாமிநாதனின் மஹாமந்திரம் அனுக்ரஹிப்பாய் 1

ஸ்வயம்ப்ரகாச ஸத்குரோ சரணம் சரணம்
ஆசாபாசம் ஒழிய அனுக்ரஹிப்பாய் ப்ரணவ மந்திரம்
ஸர்வ சங்கடமும், துக்கத்தையும் பயத்தையும் ஓட்டி
நித்ய நிர்மலமான நித்யானந்தமாயிருக்க வரம் அருள்வாய் 2

சிவகுரோ ஸ்வாமிநாதா மஹாதேவா மஹாயோகின்
ஸத்ஸ்வரூபா ஸ்வயம்ப்ரகாசா முக்திக்கு வித்தான ப்ரணவமதை உபதேசிப்பாய்
வேத வேதாந்த கலாநிதே சிதானந்த சித்ஸ்வரூபா
பரவாஸுதேவ சோதரிபுத்ரா ஸ்வாமிநாதா சரணம் சரணம் 3

ஸர்வாங்க பஸ்மோத்தூளித ஸ்வாமிநாதா ப்ரணவோபதேசம் வேண்டுகிறேன்
சரணாகத ரக்ஷகா ஸகலஹித தாயகா சரணம் சரணம் சரணம்
சரணம் கருணாசிந்தோ சரணம் ஸஜ்ஜன பந்தோ சரணம் சரணம்
பரமதயாகர பஸ்மாங்க சுந்தர ஸ்வாமிநாதா சரணம் சரணம் 4

பரஞ்ஜோதி ஸ்வரூபா சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்துள் இருப்பவனே
ஜகன்னாதா ஜகத்பதே ஸ்வாமிநாதா சரணம் சரணம்
வீராதிசூரா பராக்ரம வித்வத்ஜன மனோகரா
பரமாத்ம ஸ்வரூபா ஸ்வயம் ப்ரகாசா சரணம் சரணம் 5

கருணாஸாகரா ஸரஸிஜாக்ஷ கடாக்ஷ வீக்ஷனா சரணம் சரணம்
சரணாகத ரக்ஷகா தீன தயாளா ஸ்வாமிநாத ஸத்குரோ சரணம் சரணம்
அச்சுதானந்தா கோவிந்தா மாதவனின் மருகோனே ஸ்வாமிநாதா சரணம் சரணம்
கார்த்திகேயா கந்தா குருகுஹனே ஸ்வாமிநாதா சரணம் சரணம் 6

வேதவேதாகம ஸாரமயமான மஹாவாக்ய உபதேசம் செய்திட
வேண்டுகிறேன் ஸ்வாமிநாதா ஸத்குருநாதா சரணம் சரணம்
ஸ்வாமிநாத ஸத்குருவே நின் பதாம்புயம் பணிந்தேத்துகின்றேன்
குருநாதா மும்மூர்த்திகள் போற்றும் ஸ்வாமிநாதா சரணம் சரணம் 7

ஸ்வாமிநாத ஸத்குரோ நீயே கதியென்று சரணமடைதிட்டேன்
பரம்பொருளே நீதான் என்றுணர எனக்கு வரமருள்வாய்
உன்னையன்றி பாரினில் வேறு கடவுளுமுண்டோ சொல்
இமைக்குமுன் முன்வந்து உனது ஏகாக்ஷரம் அனுக்ரஹிப்பாய் 8

சரவணோத்பவா ஷண்முகா முருகா ஸ்வாமிநாதா ஸத்குரோ
பார்வதிஸுதனே பரமானந்தனே உனது ஏகாக்ஷரம் வேண்டுகிறேன்
சரணமடைந்திட்டேன் சக்தியாயுததரா சரணம் சரணம்
ஷடாக்ஷரா முக்தி வேண்டியுன்னை சரணடைந்துவிட்டேன்
குணப் பெருங்குன்றே பணிந்திட்டேன் சரணமடைந்திட்டேன் 9

குஹா முருகா சரவணபவா ஷண்முகா ஸ்வாமிநாதகுரோ சரணம் சரணம்
மகனே பரிசுத்த பரப்ரம்மமான நமது ஏகாக்ஷரத்தை கேட்டிடுவாய்
ஓம் சௌ ஓம் என்பதுவே முக்திக்கு வித்தாகும்
மாயையில் கட்டுண்டவனை ரக்ஷிக்கும் மஹாமந்திரமிதுவே 10

ஆசைகளைப் பொடிப் பொடியாக்கும் மஹாமந்திரமிதுவே
காமக்ரோத லோப மத மாத்ஸர்யத்துடன் பொறாமையைப் பொசுக்கும் மஹாமந்திரமிதுவே
நிராசையையுண்டாக்கி நித்ய முக்தனாக்கும் மந்திரமிதுவே
ஆறுகோடி ஏகாக்ஷரஜபம் மனமௌனத்தைத் தந்து மஹாத்மாவாக்கிவிடும் 11

சங்கல்ப நாசமுண்டாகி சாக்ஷியாய் இருத்தி வைக்கும்
எங்கும் எல்லாமுமாயிருப்பது தானென்றுணர்த்தி வைக்கும்
உன்னை சுத்த சைதன்ய ஸ்வயம் ப்ராகாச மயமாக்கும்
ஸர்வமும் ‘நான்தான்’ என்பதை சதாகாலமும் உணர்த்தி வைக்கும் 12

மகனே! மற்றுமொரு மஹாமந்த்ரமுபதேசிப்போம் கேட்டிடுவாய்
ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நம:
என்பதுவே சுப்ரமண்யஸ்வாமியெனப் போற்றும் ஸ்வாமிநாதனின் மஹாமந்த்ரமாகும்
பரம்பொருளான சிவனோடு ஞானமொழி பேசும் ஸ்வாமிநாத
ஸ்வாமியின் மஹா மந்த்ரமாகும் 13

சிற்றின்ப விடமுண்டு கட்டுண்டு நிற்பவனைக் கடைத்தேற்றும் மஹாமந்த்ரம்
ஆசைகளைப் பற்றியே நிற்கும் மனதை மாசின்றி வைத்திடும் மஹாமந்த்ரமிதுவே
முவாசையையும் ஒழித்திட சேவற்கொடிக் கதிபா சீக்கிரம் முன்வந்திடுவாய்
மாதா பிதா குரு பந்து மித்ரர்களும் நீதானப்பா 14

ஸத்குரு ஸ்வாமிநாதஸ்வாமியின் மஹாமந்த்ரஜபம்
வெந்துயரமதைத் தீர்த்து விரும்பியதைக் கிட்டி விடச் செய்யும்
மேலும் பந்தபாசம் நீங்கும் பாபங்கள் பறந்தோடிடும்
நொந்த மனம் ஆறும் சிந்தையில் சிவகுமரனிருப்பான் 15

ஆதி அந்தமற்ற ஸ்வாமிநாதஸத்குரு ஆனந்தமே உருவானவன்
வாரணன் நாரணன் புகழும் கலியுக வரதனப்பா
வீரவேல் தீரவேல் கைகொண்ட ஸ்வாமிநாத குருவை
சிக்கெனப் பற்றியே ‘சிவமே’ என்றிருந்ததி வைத்து விடுவான் 16

மயூரனே முருகனே கார்த்திகேயனை நம்பிடுவாய்
பந்தத்தில் கட்டுண்டுருகி நொந்துழலும் இவனை
ஸ்வாமிநாத ஸத்குரோ காத்து ரக்ஷித்திடுவாய்
அருள் வடிவமான அருட்பெருஞ்ஜோதியே ஸ்வாமிநாத ஸத்குருநாதா
இன்பவடிவானவனே! இவனிச்சைகளைப் பொசுக்கி யருள்வாய் 17

ஸ்வாமிநாதா குருபரா குஹா குமரா ஷண்முக நாதனே கேள்
இவன் நெஞ்சின் குறைகள் தீர்த்து இவனயும் உனக்கு சொந்தமதாக்கிக் கொள்வாய்
நெஞ்சில் பொறாமை சூது வாதுடையவர்கள் உறவை வேரறுத்திடுவாய்
பொய் சொல்லி வயிற்றை வளர்க்கும் பாபிகளின் உறவை வெறுக்கடிப்பாய்
மதுமருந்தும் காமக்ரோதமுள்ள மஹாபாபிகளின் உறவை வேரறுப்பாய் 18

அண்டமெல்லாம் கொண்டாடி பூஜித்து ஏத்திடும் ஸ்வாமிநாத ஸத்குருவின் மந்த்ரம்
அன்பையும் அருளையும் தந்து ரக்ஷிக்கும் ஸ்வாமிநாத ஸத்குருவின் மஹாமந்த்ரம்
அஞ்ஞானமுள்ளவனை அறிவாளியாக்கி, ஞான சித்தி தரும் மஹாமந்த்ரம் இதுவேயாகும்
நினைத்த மாத்திரத்திலே அஷ்டமா சித்திகளனைத்தும் தந்து முக்தியும் தரும் மஹாமந்த்ரமிதுவே 19

யம பயமெனப்படும் மஹாபயத்தைத் துடைத்து மஹாஞானியாக்கும் மந்த்ரமிதுவே
நற்குலப் பிறப்பும் வேத வேதாந்த ஸாஸ்த்ர அறிவும் நற்குணமதையும் தந்து காத்து ரக்ஷிக்கும் மந்த்ரமிதுவே
ஸ்வாமிநாத ஸ்வாமியின் மஹாமந்த்ரஜபம் ஞான வைராக்யமதையும் தந்து ஜீவன்முக்தனாக்கிவிடும்
இன்ப துன்பமற்றவனாக்கி இம்மையில் மஹாஞானியுமாக்குவிக்கும் 20

ஸ்வாமிநாத ஸ்வாமியின் மஹாமந்த்ரம் அழிவற்ற தனப்ராப்தியும் தந்து அழிவற்ற நிலையில் உன்னையிருத்தும்
ஞான பண்டித ஸ்வாமியின் மந்த்ரம் ஸர்வரோகத்தையும் போக்கி சர்வஞனாக்கிவிடும்
தேவசேனாதிபதியின் மந்த்ரம் தாரித்ர்ய துக்கத்தைத் துடைத்து தன்யனாக்கிவிடும்
ஸ்வாமிநாத ஸத்குருவின் மஹாமந்த்ரஜபம் வேண்டுவதனைத்தையும் தந்து ரக்ஷிக்கும் 21

ஸ்வாமிநாதஸ்வாமியின் மஹாமந்த்ரஜபம் மனயிருளையகற்றிவிடும்
ஸ்வாமிநாதஸ்வாமியின் மஹாமந்த்ரஜபம் மனமௌனத்தை உண்டாக்கும்
ஸ்வாமிநாதஸ்வாமியின் மஹாமந்த்ரஜபம் மனிதனை அழிவற்ற ஜோதிர் மயமாக்கி விடும்
ஸ்வாமிநாதஸ்வாமியின் மஹாமந்த்ரஜபம் தன்னை பரப்ரம்மமென்று உணர்த்தும் 22

ஸ்வாமிநாதஸ்வாமியின் மஹிமை சொல்லுக்கடங்காதப்பா
ஸ்வாமிநாதஸ்வாமி தகப்பன் ஸ்வாமியப்பா
ஸ்வாமிநாதஸ்வாமியே ஞான பண்டிதஸ்வாமியப்பா
ஸ்வாமிநாதஸ்வாமியே உன்னை சும்மாயிருத்திவைப்பான் நம்பிவிடுவாய் 23
ஞான சக்திவேல் கைகொண்ட ஷண்முகன் ஷடாக்ஷரனே ஸ்வாமிநாதஸ்வாமியானவன்
ஸ்வாமிநாத ஸ்வாமியின் த்யானம் பக்தி பரவசத்தையுண்டாக்கி முருகனடி சேர்க்கும்
ஸ்வாமிநாத ஸ்வாமியை சதாகாலமும் சிந்தித்திருப்பையேல் சித்தம் தெளிந்து சிவமயமாகிடுவாய்
ஸ்வாமிநாத ஸ்வாமியையே சந்ததமும் ஸத்குருவாய் சித்தத்தில் வைத்திடுவாய் 24

முருகன் ஸ்வாமிநாத ஸத்குருவை முழுமனத்துடன் நினைத்திட்டால் வெந்துயர் தீர்ந்துவிடும்
முருகன் ஸ்வாமிநாத ஸத்குருவை நினைத்தால் தூயமனம் பிறக்கும்
முருகன் ஸ்வாமிநாத ஸத்குருவை நினைத்தால் நல்லறிவு உண்டாகும்
முருகன் ஸ்வாமிநாத ஸத்குருவை நினைத்தால் பக்தியும் சக்தியும் பெருக்கெடுக்கும் 25

முருகனை ஸ்வாமிநாத ஸத்குருவை த்யானம் செய்தால் ஞான வைராக்யம் பெருக்கெடுக்கும்
முருகனை ஸ்வாமிநாத ஸத்குருவிற்கு தொண்டு செய்தால் அமங்களம் விலகி மங்களமுண்டாகும்
முருகனை ஸ்வாமிநாத ஸத்குருவை சத்யமாய் நம்பிவிட்டால் மெய்ஞானியாகி விடுவாய்
முருகனை ஸ்வாமிநாத ஸத்குருவை சத்யமாய் நம்பிவிட்டால் சத்யஞானானந்த மயமாகிவிடுவாய் 26

சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்துள்ளிருக்கும் ஸ்வாமிநாத
ஸத்குருவை நம்பிவிட்டால் பாபங்கள் விலகி பக்தி சித்தியாகும்
சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்துள்ளிருக்கும் ஸ்வாமிநாத
ஸத்குருவை நம்பிவிட்டால் சாபம் விலகியோடும் அஞ்ஞானம் விலகும் 27

முத்துக்குமாரா முருகா ஸ்வாமிநாதா போற்றி போற்றி
முக்திக்கு வித்தான முருகா ஸ்வாமிநாதா போற்றி போற்றி
சுத்த ஸத்வ ஆத்ம தத்வ போதனே ஸ்வாமிநாதா போற்றி போற்றி
தத்வ ஞான ஸ்வரூப தயாநிதே ஸ்வாமிநாதா போற்றி போற்றி 28

பரதத்வ ஞானம் தந்தருளும் ஸ்வாமிநாதா சாஷ்டாங்க நமஸ்காரம்
கருணைக்கடலே அருட்கடலே ஸ்வாமிநாதா சாஷ்டாங்க நமஸ்காரம்
பரம பவித்ர பக்த ரக்ஷக ஸ்வாமிநாதா சாஷ்டாங்க நமஸ்காரம்
ஸாதுஜனப்ரிய ஸ்வாமிநாதா சாஷ்டாங்க நமஸ்காரம் 29

சங்கநிதி பதுமநிதி இரண்டும் வேண்டாம் ஸ்வாமிநாதா உனது திருவடி பக்தி ஒன்றே போதும்
முக்தி நகர் அதிபனாம் ஸ்வாமிநாத ஸத்குருவே உன்னைச் சரணமடைந்திட்டேனப்பா
பக்ஷிமயில் வாகனனே ஸ்வாமிநாதா உன்னைச் சரணமடைந்திட்டேன்
ஓங்கி உனது நாமத்தை உளமாற ஜபித்திடுவேன் ஸ்வாமிநாதா உன்னைச் சரணமடைந்து விட்டேன் 30

முருகா ஸ்வாமிநாதா கதி நிதி அதி சுந்தரா உன்னை சரணமடைந்துவிட்டேன்
முருகனின் ‘சரவண பவாய நம:’ என்பதை ஸ்வாமிநாதன் மஹாமந்த்ரமென்று நம்பிவிட்டேன்
திருமால் மருகனே குஹனே சுப்ரமண்யா நீயே ஸ்வாமிநாதனாக்கிவிட்டாய்
குன்றுதோறும் அமர்ந்துள்ள ஸ்வாமிநாதா எப்பொழுதும் நின் கருணை வேண்டுமப்பா 31

சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்துள்ளிருக்கும் ஸ்வாமிநாதா நன்றே தந்திடுவாய்
ஆனந்தமே உருவமான ஸ்வாமிநாதா ஏறுமயிலேறி விளையாடி வருவாய்
கார்த்திகேயா குஹா முருகா ஸ்வாமிநாதா நிராசையை வரமாகக் கொடுத்திடுவாய்
பக்த பரிபாலனா கலியுகவரதனே ஸ்வாமிநாதா இவன் மனத்தை மௌனமாக்கிடுவாய் 32

ஏழை குறை தீர்க்க வந்த ஸ்வாமிநாதா பரம பவித்ரா சரணம் சரணம்
ஸகல கல்யாணகுண ஸ்வாமிநாதஸத்குருவே இவன் மனமிறக்கச் செய்திடுவாய்
சந்ததமும் சச்சிதானந்த மயமுமாயிருக்கும் ஸ்வாமிநாதா சிந்தை தெளிவித்து சிவமயமாக்கிடுவாய்
பரலோக வைத்யநாதா ஸ்வாமிநாதா நாத்தழும்பேற உனது நாமஜபத்தை ஏத்திடச் செய் 33

பக்தியோடு முக்திதரும் பக்தரக்ஷகனான ஸ்வாமிநாத ஸ்வாமிக்கு ஜெயமங்களம் நித்ய ஸுபமங்களம்
சதாகாலமும் ஸ்வாமிநாத ஸ்வாமியை நினைத்துருக வரம் அளிக்கும் முழுமுதற் கடவுளுக்கு ஜெயமங்களம் நித்ய ஸுபமங்களம்
ஸ்வாமிநாத ஸத்குரோ கலியுகவரதனே ஜெயமங்களம் நித்ய ஸுபமங்களம் 34

உத்தம சீலனான ஏழைப் பங்காளனுக்கு ஜெயமங்களம் நித்ய ஸுபமங்களம்
ஸஜ்ஜன ரக்ஷக ஸ்வாமிநாதனுக்கு ஜெயமங்களம் நித்ய ஸுபமங்களம்
ப்ரணவப் பொருளோனே முருகா குஹா ஜெயமங்களம் நித்ய ஸுபமங்களம்
தகப்பன் ஸ்வாமியே ப்ரம்ம ஸ்வரூபனே ஜெயமங்களம் நித்ய ஸுபமங்களம்
ஸூலினியோடிருக்கும் ஸ்வாமிநாத ஸ்வாமிக்கு ஜெயமங்களம் நித்ய ஸுபமங்களம் 35

ஆதிபராசக்தியென வேதங்கள் போற்றிடும் ஸ்ரீமாதா புவனேஸ்வரி முன்பிருக்கும் ஸ்வாமிநாத ஸ்வாமிக்கு ஜெயமங்களம் நித்ய ஸுபமங்களம்
தமிழகத்தின் தலைநகரான சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்திலிருக்கும் ஸ்வாமிநாத ஸ்வாமிக்கு ஜெயமங்களம் நித்ய ஸுபமங்களம்
பரப்ரம்ம பத்தினியான மாதா புவனேஸ்வரிக்கும் ஸ்வாமிநாத ஸ்வாமிக்கும் ஜெயமங்களம் நித்ய ஸுபமங்களம் 36

ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம:
ஓம் சரவண பவ
ஓம் தத் ஸத்